புத்தாண்டு பலன்கள்-2022-மீனம்(பூரட்டாதி 4 -ஆம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி)
அன்புள்ள மீன ராசி நேயர்களே , தன்னம்பிக்கை உடையவராகவும் , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் , நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2022 – ஆம் ஆண்டில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11 – ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள்.பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது.சிலருக்கு சொந்த வீடு , மனை , வாகனங்கள் வாங்கும் யோகமும் , பொன் , பொருள் சேர்க்கையும் , தொட்டதெல்லாம் துலங்கும் யோகமும் உண்டு.
தொழில் , வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகிவிடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும்.புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும்.
பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகப்பலன் ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயரதிகாரிகளின் ஆதரவும் , உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர் , வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய எண்ணுபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
ராசியாதிபதி குரு பகவான் இவ்வாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12 – ல் சஞ்சரிப்பதும் , 13-4-2022 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பென கூறமுடியாது என்பதால் , பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் இலக்கை அடையமுடியும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் , ஏப்ரல் மாதம் முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன்மூலம் குரு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டைப் பார்ப்பதால் தடைகள் விலகி குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உங்கள் ராசிக்கு 3 , 9 – ல் சஞ்சரிக்கும் ராகு . கேது 12-4-2022 – ல் ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சிமூலம் , ராகு ஜென்ம ராசிக்கு 2 – லும் , கேது 8 – லும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பென்பதால் , உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது , நேரத்திற்கு உணவுண்பது தேவையற்ற அலைச்சல்களைக் குறைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் , பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.