சனி தசா-புத்தி பலன்கள்
சனி தசா- சனி புத்தி
சனி தசாவில்(Sani Dasa) சனி புத்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.
சனி பலமாக அமைந்திருந்தால் இரும்பு பொருள்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் நற்பலன், பெயர், புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். என்றாலும் சுய புத்தி காலத்தில் தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலங்கள் இருக்கும்.
❤️கடந்த (2020)சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருந்தது ❓
கீழே கொடுக்க பட்டுள்ள Vote பொத்தானை ஐ அழுத்தி உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள்….❤️
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும், பகைவர்களும் அதிகரிக்கக் கூடிய நிலை, தேவையற்ற மன சஞ்சலம், பண நஷ்டம், மனைவி புத்திரர்களால் கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வீண் பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
சனி தசா- புதன் புத்தி
சனி தசாவில்(Sani Dasa) புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமாக இருந்தால் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, உற்றார் உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இடையே சுமூகமான நிலை, நல்ல அறிவாற்றல், ஞாபக சக்தி, புத்திசாலித்தனம், கல்வியில் ஏற்றம், கணக்கு, கம்ப்யூட்டர் துறைகளிலும், கலை துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஏஜென்சி கமிஷன் மூலம் அனுகூலம் ஏற்படும். எழுத்து துறையில் ஆர்வம், தாய் மாமன் வழியில் அனுகூலம், பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும்.
புதன் பலவீனமாக இருந்தால் உறவினர்களுடன் பகைமை, மனைவி பிள்ளைகள் இடையே கருத்துவேறுபாடு, கலகம், பகைவரால் பயம், ஞாபகசக்தி குறைவு, தலைவலி, நரம்புத்தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய்வழி உறவுகள் இடையே பிரச்சனை ஏற்படும்.
சனி தசா- கேது புத்தி
சனி தசாவில்(Sani Dasa) கேது புக்தியானது 1 வருடம் 1மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி, வாகன யோகம், மனைவி பிள்ளைகளால் மேன்மை, நண்பர்களின் உதவி, ஆன்மீக-தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். சேமிப்பு பெருகும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம், பெண்களால் பிரச்சினை, கலகம், பயணங்களில் எதிர்பாராத விபத்து, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல்நிலையில் பாதிப்பு, இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு, உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனி தசா – சுக்கிர புக்தி
சனி தசாவில்(Sani Dasa) சுக்கிர புக்தியானது 3 வருடம் 2 மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இல்லற வாழ்வில் இனிமை, அழகிய குழந்தை பாக்கியம், புதிய வீடு, மனை, வண்டி, வாகன யோகம், ஆடை, ஆபரண சேர்க்கை, உறவினர்களால் உதவி, அரசாங்கத்தால் அனுகூலம், கலைத்துறையில் ஈடுபாடு, வியாபார நிலையில் மேன்மை, சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் யாவும் சிறப்பாக அமையும்.
சுக்கிரன் பலவீனமாக இருந்தால் பெண்களால் அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை குறைவு, வீண் பயம், குடும்பத்தில் நிம்மதி குறைவு, கடன் பிரச்சனைகள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, வண்டி, வாகனம், வீடு, மனை போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும்.
சனி தசா -சூரிய புக்தி
சனி தசாவில்(Sani Dasa) சூரிய புத்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமாக இருந்தால் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, தந்தைவழியில் சிறப்பு, உறவினர்களால் உதவி, எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல்நிலையில் மேன்மை, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும்.
சூரியன் பலவீனமாக இருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே பகை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு, அரசு வழியில் பிரச்சனை, பணவிரயம், தொழில் வியாபாரத்தில் லாபமற்ற நிலை, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியிடம் கருத்துவேறுபாடு உண்டாகும்.
சனி தசா – சந்திர புக்தி
சனி தசாவில்(Sani Dasa) சந்திரபுத்தி ஆனது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமாக இருந்தால் பயணங்களால் அனுகூலம், ஜலத் தொடர்புடைய தொழில்கள் லாபம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் ஒற்றுமை, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை, ஆபரணம் மற்றும் வண்டி வாகன சேர்க்கைகள், ஆலய தரிசனம் செய்ய கூடிய வாய்ப்பு, தாய் மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
சந்திரன் பலவீனமாக இருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்றநிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும் அவல நிலை, வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும். உண்ணும் உணவே விஷமாகும் நிலை ஏற்படும்.
சனி தசா- செவ்வாய் புக்தி
சனி தசாவில்(Sani Dasa) செவ்வாய் புக்தி 1 வருடம் ஒரு மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமாக இருந்தால் அரசு வழியில் சாதகப்பலன், உயர் பதவிகளை வகிக்கும் யோகம், சகோதர வழியில் அனுகூலம், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபார நிலையில் உயர்வு, தன தான்ய விருத்தி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தைரியம் துணிவு யாவும் ஏற்படும்.
செவ்வாய் பலவீனமாக இருந்தால் சனி செவ்வாய் இணைந்தோ அல்லது பார்த்துக்கொண்டோ இருந்தால் எதிர்பாராத விபத்துக்களால் ரத்த காயம் படுதல், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலை, பூமி, மனை இழப்பு, பங்காளிகள் இடையே முன்விரோதம், பகைவர்களால் ஆபத்து, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் பிரச்சனை, அரசு வழியில் அனுகூலமற்ற பலன், தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வண்டி,வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.
சனி தசா – ராகு புக்தி
சனி தசாவில்(Sani Dasa) ராகு புத்தி ஆனது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலங்கள், பதவி உயர்வு, தாராள தன வரவு, தெய்வ அருளைப் பெறும் வாய்ப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, கமிஷன் ஏஜென்சி மூலம் அதிகம் சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலவீனமாக இருந்தால் மனக்கவலை, எதிர்பாராத விபத்துகளால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, காய்ச்சல், தோல் நோய், குடும்பத்தில் பிரச்சனை, மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.
சனி தசா -குரு புக்தி
சனி தசாவில்(Sani Dasa) குரு புத்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
குரு பலமாக இருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும் யோகம், புத்திர வழியில் பூரிப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு, உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல், செல்வம், செல்வாக்கு உயரும் வாய்ப்பு, தெய்வீக-ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
குரு பலவீனமாக இருந்தால் பொருளாதார பிரச்சனை, பெரியோர்களிடம் வீண் சண்டை சச்சரவு, பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மன சஞ்சலம், கருச்சிதைவு, வயிற்று கோளாறு, அரசு வழியில் நெருக்கடி, கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும்.
சனிக்குரிய பரிகாரங்கள்:
- சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிறத் துணியில் எள்ளை மூட்டைகட்டி விளக்கேற்றி வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது, எள் கலந்த அன்னத்தை காக்கைக்கு வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.
- சனி ப்ரீதியாக ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை, வடை மாலை, வெண்ணெய் முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம்.
- நீலக் கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.