மீனம்
( பூரட்டாதி 4 – ஆம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி )
எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே!!!
உங்கள் ராசிக்கு இது நாள்வரை 3 , 9 – ல் சஞ்சரித்த ராகு , கேது தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 12-4-2022 முதல் 30- 10-2023 வரை சர்ப கிரகங்களான ராகு உங்கள் ராசிக்கு 2- ஆம் வீட்டிலும் , கேது 8 – ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல் , இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி , பிள்ளைகளுக்கு உண்டாகக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்து கொள்வதும் நல்லது. தூர பயணங்களை தவிர்க்கவும்.
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது . புத்திரவழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அசையும்- அசையா சொத்துக்கள் வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடையமுடியும்.
எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது , முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் , வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும் . கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்ளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும் பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும்.புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.புதிய நபர்களிடம் பேசும் போது பேச்சில் சிந்தித்து பேசுவது உத்தமம். தொழிலில் படிப்படியான வளர்ச்சியை அடையும் யோகம் உங்களுக்கு இருந்தாலும் உடல் நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம்.
பரிகாரம்:
- ஒருமுறை சுவாமிமலை சென்று முருகப் பெருமானை ஆராதியுங்கள்.
- மாதம் ஒரு வியாழக்கிழமை அருகில் உள்ள இஷ்டமகான் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள்.