ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:சிம்மம்
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே! பிறக்கும் புத்தாண்டு உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் ஆண்டாக அமையப்போகிறது. வருடத் தொடக்கத்தில் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகி கண்டகச் சனியாக மாறுகிறார்.
இந்த ஆண்டு பெயர்ச்சியாகும் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு தடைகளை அகற்றி கொள்வீர்கள். சுய ஜாதகத்தில் உள்ள குரு, சனி, ராகு, கேதுக்களின் பலம் அறிந்து அவற்றின் பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பரிகாரங்களை செய்தால் வருடம் முழுவதும் வசந்தமாகும்.
புத்தாண்டு கிரக நிலைகள்
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தனாதிபதி புதன் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்தில் குருவும் 6-ல் சனியும் சுக்கிரனும் இருக்கிறார்கள். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் ராகு வீற்றிருக்கிறார். சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.
புத்தாண்டு தொடங்கும் போது குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றாலும் குருவின் பார்வைக்கு பலன் கிடைக்கும் அல்லவா? எனவே அந்த மூன்று ஸ்தானங்களும் பலம் பெற்று அதற்குரிய ஆதிபத்திய பலன்களை சிறப்பாக வழங்கும். அந்த அடிப்படையில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். பூமி மற்றும் விலை உயர்ந்த பொருள்களை விற்க நேரிட்டாலும் விற்று வரும் தொகையை கொண்ட பழைய கடனை அடைக்க முற்படுவீர்கள்.விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. வீடு மாற்றங்களும், உத்தியோகம் மாற்றங்களும், திருப்தி தரும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
சிம்ம ராசி பெண்கள்
இந்தப் புத்தாண்டில் சனி கண்டகச் சனியாக வந்தாலும் குரு பார்வை உங்களுக்கு கைகொடுக்கும். எனவே குரு பெயர்ச்சிக்கு பிறகு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும். வீடு இடம் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம்
இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய் சனி பார்வை ஏற்படுகிறது அவற்றின் பார்வை காலத்தில் மன நிம்மதி வெகுவாக குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. தொழிலில் மந்தநிலை இருக்கும். ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து செல்லலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதுபோன்ற காலங்களில் அனுபவஸ்த்தர்களின் அறிவுரையும், அருளாளர்களின் வழிகாட்டுதலும் ஓரளவு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும்.
செய்ய வேண்டிய பரிகாரம்
தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து பைரவரை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டியிலுள்ள மார்த்தாண்ட பைரவரை வணங்கினால் எதிர்காலம் இனிமையாக அமையும்.