ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:தனுசு
குருபகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே! பிறக்கும் புத்தாண்டில் ஏழரைச் சனி விலகி வாழ்வை வளப்படுத்த போகின்றது. கொடிகட்டி பறந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக மாறும். குரு,சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் அனைத்தும் உங்களுக்கு கொடுக்கும் பலன்கள் நற்பலன்கள் ஆகவே இருக்கின்றன. தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தடைகள் தானாக விலகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகம் தொழிலில் உயர்நிலை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்றவாறு தெய்வ வழிபாடுகளை யோக பலம் பெற்ற நாளில் செய்து வந்தால் திட்டமிட்ட காரியங்கள் மேலும் சிறப்பாக முடியும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். 5-ம் இடத்தில் ராகுவும் 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சுரிக்கிறார்கள். உங்கள் ராசியிலேயே சூரியன் புதன் இணைந்திருக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் விரையாதிபதியான செவ்வாய் வக்ரம் பெற்று 6-ம் இடத்தில் இருக்கிறார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கின்றது.
புத்தாண்டு பிறக்கும் பொழுது குருவின் பார்வை 8 ,10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகொடுக்கும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி ஆர்வம் காட்டுவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
இப்புத்தாண்டில் 4-முறை செவ்வாய்-சனி பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு செவ்வாய் பஞ்சமாதிபதி எனவே இக்காலத்தில் மன நிம்மதி குறையும். மங்கள நிகழ்சிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் கெடுபிடி அதிகரிக்கும். வேலையை விட்டு விடலாமா என்று கூட சிந்திப்பீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் திருப்தி தராது. புதிய கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து அனுமனை வழிபடுவது நல்லது. யோக பலம் பெற்ற நாளில் நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் சேமிப்பும் உயரும் செல்வாக்கும் அதிகரிக்கும்.