மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’
மார்கழி 8-ம் தேதி வரை சுக்கிரன் அனுகூலமாக இல்லை! அதன் பிறகு சாதகமாக மாறுகிறார். 7-ம் தேதி வரை புதன் நன்மை செய்வார். ராகு, குரு, செவ்வாய், சூரியன் ஆகியோர் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை. கேதுவினால் நன்மைகள் ஏற்படும். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். சனிபகவான் லாப ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது. தேவையான தருணங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
கேதுவின் சஞ்சார நிலையினால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். ராகுவின் நிலையினால் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். அக்னி கிரகமான செவ்வாய் அஷ்டமத்தில்(8) இருப்பதால் உஷ்ணம் சம்பந்தமான பிணிகள் ஏற்படக்கூடும். சரும பாதிப்புகளினால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவர் மனைவியிடையே ஒற்றுமை இராது. நீதிமன்ற வழக்குகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தடைப்படும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் வரன் அமைவதில் இடையூறு ஏற்படும்.
பலன் தரும் பரிகாரம்
தினமும் உங்கள் வீட்டில் பூஜை அறையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 5:30 மணி முதல் 07:30 மணிக்குள் 5 மண் அகல்களில் நெய் தீபம் ஏற்றி வருவது மிகச்சிறந்த பலனளிக்கும் பரிகாரம்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1-4,8-11,15,19-21,25-27
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி :22 பிற்பகல் முதல் 23,24 இரவு வரை
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணம் வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும். இருப்பினும் வருமானம் போதிய அளவிற்கு உள்ளதால் சமாளித்துவிடுவீர்கள். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக இல்லை. மார்கழி 10ஆம் தேதி வரையில் செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனைவியின் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனின் நிலை காரணமாக செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால்பற்றாக்குறை இருக்காது .
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புண்ணிய காரியங்களில் மனம் செல்லும். பெரியோர்களின் ஆசி கிட்டும். காசி, அயோத்தியா போன்ற திருத்தலங்களின் தரிசனமும் கிட்டும். (இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் புதனின் வீடாக இருப்பதால்) திருமண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும்
பலன் தரும் பரிகாரம்
உங்கள் அருகில் இருக்கும் கோவில்கள் அல்லது உங்கள் வீட்டு பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு நெய் தீபம் ஏற்றி வரவும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1,5-7,12-15,19-22,27-29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி :24 இரவு முதல் 25,26 பின்னிரவு வரை
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
இம்மாதம் முழுவதும் சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். 10-ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக உள்ளார். அதன் பிறகு அவரால் எவ்வித நன்மையும் எதிர்பார்க்க இயலாது. மாதம் முழுவதும் குரு சாதகமாக இருக்கிறார். ராகு அனுகூலமாக இல்லை. அஷ்டம(8) ராசியில் சனி தொடர்கிறார். ராசி நாதனான புதனும் சுப பலம் பெற்றிருக்கவில்லை. வரவை விட செலவுகளே அதிகமாக இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்
பலருக்கு சிறு அளவில் கடன் வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும். குடும்ப சூழ்நிலை மன நிம்மதியை பாதிக்கும். தேவையில்லாத வாக்குவாதமும் கணவர்- மனைவியிடையே அன்னியோன்ய குறைவும் ஏற்பட கூடும். திருமணம் முயற்சிக்கு சாதகமாக இல்லை கிரக நிலைகள்!! ஒத்தி போடுவது நல்லது. ஏனெனில் இத்தகைய கிரக நிலைகளின் போது தவறான வரனை நிச்சயத்து விடுவதற்கு வாய்ப்பு உருவாகும்.
சனிபகவான் அஷ்டம ராசியில் இருப்பினும் பாக்கியஸ்தானமும் அவரது ஆட்சி வீடானதுமான கும்பத்தை நோக்கி செல்வதால் உடல் நலம் திருப்திகரமாகவே இருக்கும். கேதுவின் நிலையினால் உறவினர்களுடன் கருத்து வேற்றுமையும் வாக்குவாதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை, நிதானம் உதவும்.
பலன் தரும் பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் அருகில் இருக்கும் திருக்கோயில் ஒன்றில் மண் அகலில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வந்தால் அற்புத பலன் கிடைக்கும்
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 2-5,9-11,15-18,22-25,29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி :1 இரவு வரை மீண்டும் 26 பின்னிரவு முதல் 27,28
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
சூரியன், சுக்கிரன், கேது ஆகிய வீரியம் நிறைந்த மூவரும் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். மார்கழி 11-ம் தேதியிலிருந்து செவ்வாயும், 23-ம் தேதியிலிருந்து புதனும் சாதகமாக மாறுகின்றனர். மாதம் முழுவதும் நன்மை செய்யும் கிரகங்களே அதிக பலம் பெற்றுள்ளனர். தொழில் காரகனான சனி பகவான் அஷ்டம(8) ராசியை நோக்கி நகர்வதால் அவரால் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது.
வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். அதிக அலைச்சலும், வெளியூர் பயணங்களும் அசதியை ஏற்படுத்தினாலும் முயற்சிகள் பலனளிக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சூரியன்-குரு-சுக்கிரன் நிலை திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. விவாகத்திற்கு காத்துள்ள கன்னியருக்கு மிக நல்ல வரன் அமையும். பலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.
நீதிமன்ற வழக்குகள் இருப்பின் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். விவாகரத்து போன்ற பிரச்சனைகள் சமரசத்தில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். சமாளிப்பதில் பிரச்சனை எதுவும் வராது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் பிள்ளை அல்லது பெண்ணின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்
பலன் தரும் பரிகாரம்
திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு(அக்னீஸ்வரம்), சூரியனார் கோயில் தரிசனம் கைமேல் பலனளிக்கும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 4-7,9-12,16-18,22-25
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 1 இரவு முதல் 2,3 இரவு வரை ,மீண்டும் 29
சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)
குரு, சுக்கிரன்,புதன் ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். இம்மாதம் முழுவதும்! குருபகவான் யோக பலன்களை அளிக்கிறார். மேலும் அவரது சுப பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது பல நன்மைகளை அளிக்கவல்லது. செவ்வாயும் மாதம் முழுவதும் உதவிகரமாக இல்லை. களத்திர ஸ்தானத்தை நெருங்கி வரும் சனிபகவானும் ஆதரவாக இல்லை. நிதி நிலைமை ஒரே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வார் சுக்கிரன்!
வீண் செலவுகளை கட்டுப்படுத்த இயலாது. தனஸ்தானத்தில் கேது இருப்பதால் கைப்பணம் பல விதங்களிலும் செலவழியும். மனைவியின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். கீழே விழுந்து அடி, காயம் படுவதற்கு வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமணம் முயற்சிக்கு ஆதரவாக அமையவில்லை இம்மாத கிரக நிலைகள்!
குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும். பாடல் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைக்கும் பெறும் உள்ளது. திருமண முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. குரு, ராகு, சனி ஆகிய மிக முக்கிய கிரகங்கள் வக்கிர கதியிலோ அல்லது சலனத்திலோ இருக்கும்போது தவறானவரனை நிச்சயத்துவிடும் வாய்ப்பு உள்ளது.
பலன் தரும் பரிகாரம்
திருநாகேஸ்வரம், காளகஸ்தி, திருப்பாம்புரம்க்ஷேத்திர தரிசனம் மிகவும் ஏற்ற பரிகாரமாகும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1,2,6-8,12-14,19-22,26-28
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 3 இரவு முதல் 4,5 பின்னிரவு வரை
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
சுக்கிரனின் மாதம் முழுவதும் சுப பலம் பெற்று இருக்கிறார். அஷ்டம ராசியில் அமர்ந்துள்ள குருபகவான் அதிக அலைச்சலையும், இழப்பையும், வெளியூர் பயணங்களையும் ஏற்படுத்துவார். மார்கழி 10-ம் தேதி வரையில் செவ்வாய் சாதகமாக இருக்கிறார். புதன் 23-ம் தேதியிலிருந்து உதவிகரமாக மாறுகிறார்.
பணவரவு போதுமான அளவிற்கு இருப்பதால் குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனை ஏதும் இராது. மீன ராசியில் உள்ள ராகுவினால் மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குருவின் அம்சம் ராகுவிற்கு சேர்வதால் எளிய சிகிச்சையினாலேயே குணம் தெரியும். கணவர்-மனைவியிடையே பரஸ்பர அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். குரு-சுக்கிரன் சுப பலத்தினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிருக்கும் சாத்தியக்கூறு உள்ளது.
பலன் தரும் பரிகாரம்
திருமல- திருப்பதி, குணசீலம்(திருச்சி அருகில்), ஒப்பிலியப்பன் சன்னதி தரிசனம் கைமேல் பலன் அளிக்கும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1-4,8-11,16-18,22-24,29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 5 பின்னிரவு முதல் 6,7 வரை
துலாம்
சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாகவேசஞ்சரிக்கின்றார்! ராகுவும் அனுகூலமாக இருக்கிறார். 11-ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருக்கிறார். 22-ம் தேதி வரை புதன் உதவிகரமாக உள்ளார். குரு குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்கிறார். விரயத்தில் நிலை கொண்டுள்ள கேது ஆதரவாக சஞ்சரிக்கவில்லை.
தேவையான அளவிற்கு பண வசதி இருப்பதால் குடும்ப நிர்வாகம் சிரமம் இன்றி நடக்கும். முதல் மூன்று வாரங்கள் புதன் சுபபலம் பெற்றுள்ளதால் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல வரன் அமையும். நண்பர்களின் உதவி கிட்டும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாகவே உள்ளது.
நான்காம் வாரத்தில் எதிர்பாராத செலவு ஒன்று ஏற்படும். சமாளிப்பதில் பிரச்சனை எதுவும் இருக்காது. வெளியூர் பயணம் ஒன்று லாபகரமாக இருக்கும். பெண் அல்லது பிள்ளை ஒருவருக்கு வேலை கிடைத்து, பணி உத்தரவு வரும்.
பலன் தரும் பரிகாரம்
வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை, மகாலட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு முன் நெய் தீபம் ஏற்றி வைத்து, காய்ச்சிய பாலில் கற்கண்டு பொடி செய்து சேர்த்து நெய்வேத்தியம் செய்து, லட்சுமி அஷ்டோத்திரம், மீனாட்சி பஞ்சரத்னம், அபிராமி அந்தாதி துதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லி பூஜித்து வந்தால் போதும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1,5-7,11-13,19-21,26-29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 8,9,10 காலை வரை
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)
ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். மார்கழி 10-ம் தேதி வரையில், அதன் பிறகும் அவர் ஆதரவாக இல்லை. உஷ்ண சம்பந்தமான பிணிகள், சரும உபாதைகள் ஏற்படக்கூடும். அதிக அலைச்சலும் சிறு விஷயங்களுக்கு கூட அதிக பிரயத்தனமும், பிரயாசையும் தேவைப்படும். குருபகவான் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை. ஆயினும் சுக்கிரன் சுப பலம் பெற்றுள்ளார்.
பணவசதி நன்றாகவே உள்ளது. பழைய கடன்கள் இருப்பின் அவற்றை தீர்த்து மன நிம்மதியை பெறலாம். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான மீனத்தில் ராகு நிற்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சனியினால் அளவோடு நன்மைகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவினால் எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிட்டும்.
புத்திர ஸ்தானத்திற்கு தோஷம் ஏற்பட்டுள்ளதால், கருவுற்றிருக்கும் பெண்கள் அதிஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். சுக்கிரன் சுப பலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும்
பலன் தரும் பரிகாரம்
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு வந்தாலே போதும். உடனுக்குடன் பலன் தெரியும். செல்லும்போது தீபத்தில் சேர்ப்பதற்கு பசு நெய் எடுத்து செல்லவும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 1-4,8,9,13-15,20-22,26-28
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி :10 காலை முதல் 11,12 இரவு வரை
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
ஜென்ம ராசியில் சூரியன், சனிபகவான் மகர ராசி விட்டு கும்ப ராசி நோக்கி செல்வது மிக நல்ல கிரக மாறுதல் ஆகும்! சுகஸ்தானத்தில் ராகு, குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குழந்தைகளின் நலனில் அளவற்ற நன்மைகளை அள்ளித் தருவார். பாடல் பெற்ற திருத்தல தரிசனமும், கங்காநதி ஸ்நான பாக்கியமும் கிடைப்பதற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது மிகவும் சாதகமான கிரக அமைப்பாகும்.
சுக்கிரனும் குருவும் கொடுப்பதை ராகு விரயம் செய்துவிடக்கூடும். பண வசதி திருப்திகரமாக இருப்பினும், சேமிப்பதற்கு சாத்தியக் கூறி இருக்காது. சுகஸ்தானத்தில் ராகு இருப்பதால் மனக்கவலைகள், மனத்தை அரிக்கும் என கூறுகின்றன ஜோதிட நூல்கள். குடும்பப் பிரச்சனைகள், மனதில் டென்ஷன் ஏற்படுத்தும். மீனம் குருபகவானின் ஆட்சி ராசியாக இருப்பதால் ராகுவின் தோஷம் பெருமளவில் குறைகிறது. குருபகவானின் பார்வை அல்லது இணைதல் ஏற்பட்டால் ராகு மற்றும் கேது ஆகிய இரு நிழல் கிரகங்களின் வீரியம் குறைவதாக ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் புராண நூல் விவரித்துள்ளது.
தனது ஆட்சி ராசியிலேயே மீனத்திலேயே இருப்பதாலும், ராகுவின் தோஷத்தை பெருமளவில் குறைத்து விடுகிறார் குரு! வீண் செலவுகளை தவிர்க்க இயலாது. திருமண முயற்சிகளில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அதன் பிறகு வரன் அமையும். நண்பர்கள் நெருங்கிய உறவினர்களுடன் பகை உணர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை வீட்டாருடன் விரோதம் ஏற்படும். கூடிய விரைவில் தவிர்ப்பது நல்லது. ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள சூரியனால் அதிக அலைச்சலும் உடல் நலனில் பாதுகாப்பும் கவலை அளிக்கும். கைப்பணம் பல வழிகளில் விரயமாகும்.
பலன் தரும் பரிகாரம்
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் தரிசனம் உடனுக்குடன் பலன் அளிக்கும். இயலாதவர்கள் லட்சுமி நரசிம்மர் படத்திற்கு அனுதினமும் நெய் தீபம் ஏற்றி வைத்து 12 முறைகள் வலம் வந்து நமஸ்கரித்து வருதல் வேண்டும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 2,3,7-11,15-18,22-25
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 12இரவு முதல் 13,14 வரை
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள சனிபகவான் கும்ப ராசியை நோக்கி பயணிப்பது ஜென்ம சனி தோஷத்தை குறைக்கிறது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். சுக்கிரன் இரண்டாம் வாரத்தில் இருந்து சுப பலம் பெறுகிறார். ராகுவினாலும் நன்மைகள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற உதவுவார் ராகு. குரு பகவான் சாதகமாக இல்லை.
பண வசதி திருப்திகரமாக உள்ளது. விவாக சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டு அதன் பிறகு வரன் அமையும். உறவினர்களிடையே மனக்கசப்பும், கருத்து வேற்றுமையும் உருவாகும். நீதிமன்ற வழக்குகள், சொத்து, பாகப்பிரிவினை சம்மந்தமான பிரச்சனைகள் எவ்வித முடிவும் இன்றி கவலை அளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு இதமாய் அமையும்.
பலன் தரும் பரிகாரம்
திங்கள் கிழமை தோறும் பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில்(05:30-07:30) அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ 5 நெய் தீபங்கள் ஏற்றி வாருங்கள். அதி அற்புத பலன்களை பெறுவீர்கள்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி : 2-5,9-12,18-21,26-28
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 15,16,17 மாலை வரை
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குரு அனுகூலமாக இல்லை! தனஸ்தானத்தில் ராகு இருப்பதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பின்பு சிரமப்பட வேண்டி இருக்கும். பண வசதிக்கு குறைவிராது. குடும்ப சூழ்நிலை மனநிறைவு அளிக்கும். சனிபகவான் ஜென்ம ராசி அணுகுவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது.
கணவன்-மனைவியரிடையே பரஸ்பர அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். செவ்வாய் சிறந்த சுப பலம் பெற்றுள்ளதால் நிலம், வீடு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். கூடியவரையில் வெளியூர் பயணங்களையும், அலைச்சலையும், கடின உழைப்பையும் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
அஷ்டம ராசியில் கேது இருப்பதால், கீழே வழுக்கி விழுதல் ,கை கால்களில் அடிபடுதல் போன்ற சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். நடக்கும்போது எச்சரிக்கை நிதானம் மிக, மிக அவசியம்.
பலன் தரும் பரிகாரம்
திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு(அக்னீஸ்வரம்), சூரியனார் கோயில் தரிசனம் கைமேல் பலனளிக்கும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி :4-7,12-16,20,21,26-29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 17 மாலை முதல் 18,19 வரை
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
உங்கள் ராசிநாதனான குரு பகவான் மார்கழி 3ம் தேதி வரை அனுகூலமாக இல்லை! வக்கிரகதியில் இருப்பதால் 4-ம் தேதி வக்கிரம் நிகர்த்தியாவதால்! மாதம் முடியும் வரை நன்மைகள் உண்டாகும். இம்மாதம் முழுவதும் சுக்கிரன் அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கிறார். பண வசதிக்கு குறைவிராது.
குடும்பத்தில் ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் நிலவும். ஜென்ம ராசியில் ராகு நிலை கொண்டிருப்பதாலும் ,சனிபகவான் விரைய ஸ்தானத்தை நோக்கி விரைவதாலும் அலைச்சல் அதிகமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும். சிறு விஷயமானாலும் அதிகமாக பாடுபட வேண்டி இருக்கும். பல மாதங்களாக கவலை அளித்து வந்த பிரச்சனை ஒன்று நல்லபடியாக தீரும்.
திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு ஏற்ற மாதம் இது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் நண்பர் அல்லது உறவினர் ஒருவரது வருகை மகிழ்ச்சியை அளிக்கும். மூதாதையர் தேடி வைத்த சொத்து ஒன்று கைவிட்டுப் போகும்.
பலன் தரும் பரிகாரம்
24 சனிக்கிழமைகள் உங்கள் வீட்டின் பூஜையறையில் மாலையில்(05:30-07:30) வழக்கமாக ஏற்றும் தீபத்தை ஏற்றிவிட்டு, அதன் பின் மண் அகல்களில் 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். அது அற்புத பலன் கிடைக்கும்.
பலன் தரும் தினங்கள்
மார்கழி :1-4,9-11,15-18,23-25,29
சந்திராஷ்டம தினங்கள்
மார்கழி : 20,21,22 பிற்பகல் வரை