ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:துலாம்
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் ராசி அன்பர்களே! இதுவரை அர்த்தாஷ்டம சனியில் பிடியில் சிக்கியிருந்த உங்களுக்கு இப்பொழுது நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. கடந்த இரண்டரை வருட காலமாக உடலாலும் உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாமல் குரு பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. எனவே எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கிய தொல்லைகள் அகன்று அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.
புத்தாண்டு கிரக நிலைகள்
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேதுவும்,சப்தமஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனும் விரயாதிபதி புதனும் இருக்கிறார்கள். இதனால் புத ஆதித்த யோகம் ஏற்படுகிறது. 4-ல் உள்ள சனியோடு ராசிநாதன் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். 6-ம் இடத்தில் குரு பலம் பெற்று விளங்குகிறார். அஷ்டமத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது.
ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 2,10,12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே பணவரவு, குடும்ப முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, உத்தியோக முயற்சியில் வெற்றி போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு வாங்குவது அல்லது வீடு கட்டும் யோகம் ஏற்படலாம். சொத்து பிரச்சனைகள் சமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு மனக்கவலையை தரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வுடன் அமையும்.
கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம்
இந்தப் புத்தாண்டில் நான்கு முறை செவ்வாய் சனி பார்வை ஏற்படுகிறது இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இக்காலத்தில் வழிபாடுகள் மூலம் தடைகளை அகற்றிக் கொள்ள இயலும்.
செய்ய வேண்டிய பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து லட்சுமியை வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் பட்டமங்கலம் சென்று திசை மாறிய தட்சணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.