ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:விருச்சிகம்
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தரும் ஆண்டாக அமையப் போகிறது. தனஸ்தானத்தில் தொழில்ஸானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் இணைந்து சஞ்சரித்தபடி ஆண்டானது தொடங்குவதால் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சனி, குரு, மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகளின் விளைவாக வசந்த காலம் உருவாக போகிறது.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்கிரம் பெற்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தன வரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தனஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் சனியோடு சுக்கிரன் வீற்றிருக்கிறார். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை பார்க்கிறார். ஜீவனஸ்தானத்தில் ராகு சந்திரனோடு கூடி இருக்க 12 கேது இருந்தபடி புத்தாண்டு தொடங்குகிறது.
ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 1,9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் மிஞ்சும் பலன் தரும் விதம் தொழில் லாபம் கிடைக்கும். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வருங்காலத்தை வளமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். ஒளிமயமான எதிர்காலம் உருவாக நண்பர்கள் வழிகாட்டுவர். பணி புரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகளால் பலன் உண்டு. வெளிநாட்டில் இருந்தும் அனுகூல தகவல் கிடைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
இப்பத்தாண்டில் நாலு முறை செவ்வாய் -சனி பார்வை ஏற்படுகிறது. எனவே அவரது பார்வை காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது அவசியம். எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளை கேட்டும் ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளை பெற்றம் செய்வது நல்லது. புதியவர்களை நம்பி தொழிலில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலமே நன்மைகளை அடையலாம். குடும்பச் சுமை கூடும்.
பலன் தரும் பரிகாரம்
ஆண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு வந்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.